Tamil

சிறையிலிருந்தே தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்

Written by : TNM Staff

சுதந்திரத்திற்கு பின் இந்தியா தனது தடத்தினை சீர் செய்து கொண்டிருந்த நேரம். 1951  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய இந்தியாவின் முதல் பொது தேர்தல் 1952 ஆம் ஆண்டின் வசந்த காலம் வரை நீண்டது. 21 வயது நிறைவடைந்த 17 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க தகுதி உள்ளவர்களாக இருந்தனர். அவர்களில் 85 % பேர் எழுத்தறிவில்லாதவர்கள் என வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் துரோகம் செய்துவிட்டதாகவும், முதலாளிகளுக்கும், நிலஉடைமையாலர்களுக்கும் ஆதரவாக செயல்படுவதாகவும் கம்யுனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியை அகற்றும் நோக்கில் கம்யுனிஸ்ட் கட்சி தேசிய அளவில் புரட்சி செய்ய துவங்கியது. அதனை தொடர்ந்து கம்யுனிஸ்ட் கட்சி 1948 லிருந்து பல மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டது. இதனால் அதன் பல உறுப்பினர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொதுத்தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்குமான தேர்தலும் இணைந்தே நடத்தப்பட்டது. சென்னை மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் மார்ச் 1952 இல் நடந்தது. சென்னையில் கம்யுனிஸ்ட் கட்சியை உருவாக்கிய பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் தங்களுக்கு எதிரான பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது.” ராமமூர்த்தியின் உடல் இயலாமையை தொடர்ந்து அவரால் பகலில் நடமாட முடியாது. தனது கட்சி தோழர்களுக்கு, அப்போது நிலவிய சூழலை விளக்குவதற்காக அவர் இரவு நேரமே பல இடங்களுக்கும் சென்று வந்தார்.” என ராமாமூர்த்தியின் வாழ்க்கை குறிப்பை எழுதிய என்.ராமகிருஷ்ணன் கூறுகிறார். அவரை பற்றிய தகவல் அளிப்பவருக்கு பரிசு தொகை வேறு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

1951 ன் பின் பகுதியில் இந்த கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் பாம்பேக்கு ரயிலில் செல்லும் போது கைது செய்யப்பட்டார். மாறுவேடம் அணிந்து ரயிலில் சென்ற ராமமூர்த்தியை, அதே பெட்டியில்பயணம் செய்த சிஐடி அதிகாரி ஒருவர் கைது செய்தார். 2008 இல் ராமகிருஷ்ணன் எழுதி வெளிவந்த அந்த புத்தகத்தில், ராமமூர்த்தியின் கைது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டதாக கூறுகிறார். அமலாபுரம் ரயில்வே நிலையத்திலிருந்து மதுரை மத்திய சிறைக்கு ராமமூர்த்தி கொண்டுவரப்பட்டார்.

ராமமூர்த்தி கைது செய்யப்பட்ட நேரம் தேர்தல் நேரமாக இருந்தது. கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை ராமமூர்த்தியை மதுரை வடக்கு தொகுதியில் களமிறக்க முடிவு செய்தது. அவரது சிறை வாழ்க்கை அதற்கு எதிர்மறையான சூழலாகவோ அல்லது சௌகரியமற்றதாகவோ இருக்கவில்லை. பி.ராமமூர்த்தி தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக மதுரையில் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் புகழ்பெற்றவராக இருந்தார். உழைக்கும் வர்க்கத்தினரை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியதில் பி.ராமமூர்த்தி முக்கிய பங்கு வகித்தவர். 1940 களில் மதுரையில் ஜவுளி ஆலை தொழிலாளர்களுக்கு வேண்டியும் தீவிரமாக களமிறங்கி செயலாற்றியவர் அவர். ஏஐடியுசி தொழிற்சங்கத்தை அங்கு நிறுவியதோடு அல்லாமல், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக தொழிலாளர் நல ஆணையம் முன் நேரில் சென்று வாதாடி உரிமைகளை பெற்று கொடுத்தவர்.

“ அவரது சிறை வாழ்க்கையின் போது, மக்களை சந்திக்க பல்வேறு வழிகளை அவர் கையாண்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, உடல்நலம் இல்லாதவர் போல் நடித்தார். அப்படி போகும் வழியில், பொதுமக்கள் கவனத்தை ஈர்க்க உரக்க சத்தத்துடன் கோஷங்கள் போடுவார்.” என அவரது மகளும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான வைகை கூறுகிறார்.

தேர்தல் ஆணையம், முடிவுகளை அறிவித்த போது, சிறையில் இருந்த ராமமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சிதம்பர பாரதியை 3332 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

From ‘strong support’ to ‘let’s debate it’: The shifting stance of RSS on reservations

7 years after TN teen was raped and dumped in a well, only one convicted

Marathwada: In Modi govt’s farm income success stories, ‘fake’ pics and ‘invisible’ women

How Chandrababu Naidu’s Singapore vision for Amaravati has got him in a legal tangle

If Prajwal Revanna isn’t punished, he will do this again: Rape survivor’s sister speaks up