கட் அவுட்டை அகற்றிய இன்ஸ்பெக்டரை போனில் மிரட்டிய அதிமுககாரர்

இருவருக்கும் இடையே உள்ள தொலைபேசி உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரல்
கட் அவுட்டை அகற்றிய இன்ஸ்பெக்டரை போனில் மிரட்டிய அதிமுககாரர்
கட் அவுட்டை அகற்றிய இன்ஸ்பெக்டரை போனில் மிரட்டிய அதிமுககாரர்

கடந்த சில நாட்களாகவே அதிமுகவினர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்த நாளையொட்டி அவரது புகழ்பாடி தமிழகமெங்கும் கட் அவுட்களை வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டம், களியாக்கவிளை போலீஸ் இன்ஸ்பெக்டரை அந்த கட் அவுட்கள் சிலவற்றை அகற்றியதாக கூறி அதிமுக ஒன்றிய செயலாளர் போனில் மிரட்டிய சம்பவம் ஆளும்கட்சிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது.

அதிமுகவின் மேல்புறம் ஒன்றிய செயலாளராக இருப்பவர் உதயகுமார். இவர் மார்த்தாண்டம் முதல் கேரளா எல்லையான களியாக்காவிளை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கட் அவுட்கள் வைத்துள்ளார். வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக புகார் வரவே இன்ஸ்பெக்டர் சாம்சன் கட் அவுட்களை எடுத்து மாற்ற கோரியுள்ளார். ஆனால் சாம்சன் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து,களத்தில் குதித்த இன்ஸ்பெக்டர் சாம்சன், கட் அவுட்களை அப்புறப்படுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த உதயகுமார் இன்ஸ்பெக்டர் சாம்சனின் போனில் அழைத்து மோசமாக திட்டியதுடன்,மிரட்டவும் செய்துள்ளார். 

இருவருக்குமிடையே நடந்த போன் உரையாடல்

இன்ஸ்பெக்டர் : ஹலோ

உதயகுமார் : நான் உதயகுமார். அதிமுக ஒன்றிய செயலாளர் பேசுகிறேன்.நீங்கள் எப்படி அம்மாவின் பேனரை அகற்றினீர்கள் ?

இன்ஸ்பெக்டர்: போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது எடுத்தோம்.

உதயகுமார்: அம்மாவின் பேனரை ஏன் எடுத்தாய் ?

இன்ஸ்பெக்டர்: போக்குவரத்துக்கு இடையூறாக ஏன் வைத்தீர்கள் ?

உதயகுமார்: ஒரு மணி நேரம் டைம் தாரேன் . எபேனரை எடுத்த இடத்தில் வை.

இன்ஸ்பெக்டர்: நான் என்ன கட்சிக்காரனா ?

உதயகுமார் : அம்மா போர்டை ஏன் எடுத்த ? உன்னை விடமாட்டேன்

இன்ஸ்பெக்டர்:ஹலோ . உதயகுமார் உங்களுக்கு வைக்க யார் அனுமதி கொடுத்தா ?

உதயகுமார்: எனக்கு ரத்தம் கொதிக்குது. என்ன அங்க வர வைக்காதே ராஸ்கல் ஒழுங்கா பேனரை அங்கேயே வை.

இன்ஸ்பெக்டர்: மிஸ்டர் உதயகுமார்..ஒருமையில் பேசாதீங்க.

உதயகுமார்: என் பேரூராட்சியில் நான் பேனரை வைக்க யாரிடம் கேட்க வேண்டும் ?

இன்ஸ்பெக்டர்: ஹலோ .அது ஹைவேஸ்

உதயகுமார்: போர்டை ஒழுங்காக வைத்து விடு. அம்மா போர்டை எடுக்குற அளவு நீ பெரிய ஆளாகீட்டியா ?

இன்ஸ்பெக்டர்: ஒரு ரவுடிப்பய இன்ஸ்பெக்டரை மிரட்டுகிறாயா ?

உதயகுமார்: நான் நேரில் வருகிறேன் . உன்னை என்ன பண்ணுகிறேன் பார்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com