பெங்களூரு அருகே திருமண வீட்டு சாப்பாட்டில் ரசம் மற்றும் சாம்பார் நன்றாக இல்லை என காரணம் கூறி திருமணத்தை நிறுத்திய திமிர் மணமகனை போலீசார் தேடி வருகின்றனர்
மேற்கு பெங்களூரு அருகேயுள்ள சுதந்திரபாளையத்தை சேர்ந்தவர் ராஜூ. இவர் பெங்களூருவில் தேயிலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் தும்கூரை அடுத்த குனிகல் என்ற ஊரை சேர்ந்த சௌமியா என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி 31 ம் தேதி தும்கூரில் வைத்து திருமணம் நடத்த உத்தேசிக்கப்பட்டது.
இதனையடுத்து திருமணத்திற்காக புதுமாப்பிள்ளை ராஜூ தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை தும்கூர் புறப்பட்டு சென்றார். சனிக்கிழமை நல்ல முறையில் திருமண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த விருந்தினை சாப்பிட சென்ற மாப்பிள்ளை வீட்டினர் விருந்தில் பரிமாறப்பட்ட ரசமும், சாம்பாரும் ருசியில்லை என புகார் கூறி பிரச்சினை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர்.
தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டினர் இதனையே காரணம் கூறி திருமணத்தை ரத்து செய்துவிட்டு பெங்களூருவுக்கு திரும்பினர். இது பெண் வீட்டாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே, சவுமியாவின் தாய் வழி உறவினரான கோவிந்தராஜு சவுமியாவை திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். அதனை தொடர்ந்து உடனடியாக இருவருக்குமிடையே திருமணம் நடந்தது.
திருமணத்தில் கலந்து கொண்ட பெண்ணின் உறவினர்கள் தேவையற்ற காரணத்திற்காக திருமணத்தை நிறுத்தியவரிடமிருந்து மணப்பெண்ணின் வாழ்க்கை காப்பற்றப்பட்டதாக கூறி வாழ்த்தி சென்றனர்.
தொடர்ந்து, பெண் வீட்டார் திருமண நிச்சயதார்த்தத்தின் போது ராஜுவுக்கு வரதட்சணையாக கொடுத்த 50000 ரூபாய் பணம் மற்றும் தங்க மோதிரம் இவற்றை மீட்டு தரவும், திருமண ஏற்பாட்டிற்கு ஆன செலவை நஷ்ட ஈடாக பெற்று தர கோரியும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் தலைமறைவான ராஜூவை தேடி வருகின்றனர்.