கோவையில், கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளியான ஒரு நாளைக்கு பின்னர், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிகிழமையன்று, கல்லூரி வளாகத்தில் இருக்கும் கிணற்றில், அபிநாத் என்ற மாணவரின் பிணம் மிதந்ததை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோர் மீது பழியை போட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில், அந்த மாணவர் பொறியியல் படிக்க ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரிலேயே பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளதாகவும் கூறினர்.
இதுகுறித்து கல்லூரி செயல் அதிகாரி கூறுகையில், “ அந்த மாணவர் டாக்டர் ஆகவே விரும்பியுள்ளார். இங்கு தொடர்ந்து படிக்க விரும்பவில்லை. அதனை விளைவாகவே அந்த மாணவர் இந்த மோசமான முடிவை எடுத்துள்ளார். கல்லூரி நிர்வாகத்திற்கு இதில் எந்தவித ஒரு பொறுப்பும் இல்லை” என்று கூறினார்.
“ வெள்ளிகிழமை காலை, கல்லூரியில் இருக்கும் செக்யூரிட்டிகள், அந்த மாணவனை காம்பவுண்ட் சுவரில் பார்த்துள்ளனர். அப்போது கீழே இறங்கி வரும்படி அபிநாத்திடம் கூறியுள்ளனர்” என போலீஸ் அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியுள்ளார். “ அதன்பிறகு சிறிது நேரத்தில் அபிநாத் கிணற்றில் சாடியுள்ளான். அபிநாத் ஒரு நல்ல மாணவனை போன்றே தெரிகிறது.கிராமத்திலிருந்து வந்துள்ள அந்த மாணவனால், நகரத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, தற்கொலை என்றறிந்ததும் வெடிகுண்டு புரளியை உருவாக்கி மாணவர்களை கல்லூரியை விட்டு வெளியேற்றியதாக, மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம், மாணவர்கள் கல்லூரியின் சில விதிகளுக்கு எதிராக போராடிய ஒரு சில மாதங்களுக்கு பின் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தற்கொலை விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளதாக மாணவர்கள் கூறியதாக தி இந்து கூறியுள்ளது.