கடந்த மார்ச் 11 ஆம் தேதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனித்து போட்டி என அறிவித்த பின், திடீரென அவர் மக்கள் நல கூட்டணியில் இணைந்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் விமர்சகர்கள் பலரும், இந்த கூட்டணியால் திமுகவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதிமுகவிற்கு எதிரான வாக்குகளை சிதறடிக்க கூடும் என்கின்றனர்.
மக்கள் நல கூட்டணி மற்றும் தேமுதிக இடையிலான தொகுதி உடன்பாட்டின்படி, தேமுதிக 124 சீட்டுகளிலும், மக்கள் நல கூட்டணி 110 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது தேமுதிகவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி தான்.
ஞானி சங்கரன் (அரசியல் விமர்சகர்)
இந்த அணிச்சேர்க்கை நிச்சயம் திமுகவிற்கு பாதகமானது. அவர்கள் தேமுதிகவை தங்கள் பக்கம் வைத்திருக்க தவறிவிட்டனர். ஆனால் இந்த அணிச்சேர்க்கையால் நிச்சயம் அதிமுகவிற்கு பலன் ஏற்படும் என கூற முடியாது. அதுபோன்றே, இந்த அணி மக்களின் நம்பிக்கையை எந்த அளவு வென்றெடுக்கும் என்றும் தெரியவில்லை. அதனால் நாம் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. திமுக, அதிமுக, மக்கள் நல கூட்டணி, பாமக, பிஜெபி என பல அணிகள் மோதுவதால் வாக்குகள் சிதறக் கூடும். அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் மட்டுமல்லாது திமுகவிற்கு எதிரான வாக்குகளும் சிதறக் கூடும்
டிஎன் கோபாலன் (மூத்த பத்திரிக்கையாளர்)
இந்த கூட்டணி அதிமுகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதால், அம்மாவிற்கு தான் அதிக பலனை தரும். ஆனால், மிகவும் முக்கியமாக மக்கள் நல கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்ததன் மூலம் அதன் நம்பகத்தன்மையை இழக்கிறது. ஒரு பக்கத்தில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் மாற்று அரசியல் என்று கூறிகொண்டே மறுபக்கம் சந்தர்ப்பவாதிகளுடனும், ஊழல் பேர் வழிகளுடனும் கைகோர்க்கிறார்கள். திருமாவளவன், சமூகத்தில் அதிகம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும் கூட, வைகோவும், விஜயகாந்தும் வகுப்புவாத பிஜெபியுடனும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜெயலலிதாவுடனும் கடந்த காலங்களில் கூட்டணி வைத்தவர்கள் தான். வைகோவாவது தமிழ் தேசிய அரசியல் கொள்கையுடையவர் என கூறலாம் ஆனால் தேமுதிக எந்த கொள்கை மூலம் அறியப்படும் ? தேமுதிகவுடனான கூட்டு இடதுசாரிகளின் மரியாதையை பாதிக்கும்.
டாக்டர்.ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)
“2014 லோக்சபா தேர்தலின் கணக்குப்படி பார்த்தால், இந்த தேர்தல் அதிமுகவிற்கு தான் சாதகமாக அமையும். ஆனால் 2006,2009 மற்றும் 2011 வாக்கு முறைகளை பார்த்தால், இந்த தேர்தல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே சாதகமாக அமையும்.” என கூறினார்.
2006 தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி போட்ட போது, திமுக-காங்கிரஸ் கூட்டணி 35 சதவீத வாக்குகளை பெற்றது. 2009 இல் தேமுதிக 10 சதவீத வாக்குகளை பெற்ற போது, திமுக- காங்கிரஸ் 42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 2011 இல் திமுக- காங்கிரஸ் கூட்டணி 32 சதவீத வாக்குகளை பெற்றது. மக்கள் நல கூட்டணி- தேமுதிக உடன்பாடு குறித்து பேசிய போது “ விஜயகாந்தை ஒரு தலைவராக முன்னிறுத்தியதன் மூலம் இந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணி ஒரு சிறந்த தந்திரத்தை கையாண்டுள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை அவருக்கு கொடுத்துள்ளனர்.”
ஆர். மணி (மூத்த பத்திரிக்கையாளர்)
“: இது நிச்சயம் வாக்குகளை பிரிக்கும். ஆனால் கேள்வியே இதனால் யார் பயன்பெற போகிறார்கள் என்பது தான். அது அதிமுகவிற்கு தான் சாதகமாக அமையும் என எளிதில் கூறிவிடமுடியாது. அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் 4 அல்லது 5 வழிகளில் பிரிந்து செல்லும். இது கொஞ்சம் அம்மாவிற்கு சாதகமாகவும், திமுகவிற்கு பாதகமாகவும் அமையும்.”
“மக்கள் நல கூட்டணி- தேமுதிக உடன்பாடு நிறைய கீழ் மட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும். 90 சதவீதத்திற்கும் அதிகமான தேமுதிகவினர், திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். எனவே, விஜயகாந்த் தற்போதைய சூழலுக்கு எதிராக நீந்த துவங்கியுள்ளார். இந்த மாதிரிபட்ட சூழலில் என்ன நேரும் என ஒருவரால் கற்பனை செய்து பார்த்துவிட முடியும். மதிமுகவை பொறுத்தவரை வெறுங்கையுடன் நிற்கிறது. அவரது கட்சிக்கு இந்த சேர்க்கையால் பலன் உருவாகலாம்.”