தமிழகத்தில் இரு தலித் இளைஞர்களின் மரணத்தை பற்றியும், தமிழக அரசியல் அதனை எடுத்து கொண்டவிதத்தை பற்றியும் கூறும் மூன்று தொடர்களில் இரண்டாவது தொடர்
சித்ராவால் இரவில் தூங்க முடியவில்லை. தனது மகன் கோகுல்ராஜின் கொடூர கொலையை பற்றிய விடை தெரியாத கேள்விகளும்,மர்மங்களும் ஒவ்வொரு நாளும் அவரது மனதை அலைகழித்து கொண்டிருந்தது.
“ நான் பைத்தியக்காரியாக மாறிடுவேன் போல இருக்கு” என தனது தலையை விரக்தியுடன் பிடித்து கொண்டே கூறினார் சித்ரா. அவரது மூத்த மகனான கலைச்செல்வன் தனது தாயாரான சித்ராவை எதோ இழந்ததை போன்று உற்று நோக்கி கொண்டிருந்தார்.
“அம்மா இப்போ கூட சிலநேரங்கள்ல அமானுஷ்ய சக்திகளை நம்புறாங்க.கடவுளின் முன்னால நின்னுகிட்டு பகடைகளை உருட்டிக்கிட்டு நிப்பாங்க. தன்னோட கேள்விகளுக்கு ஏதாவது விடைகிடைக்கும்னு எதிர்ப்பார்க்கிறாங்க” என கலைச்செல்வன் பேசி கொண்டிருந்த போது தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டிருந்தார் சித்ரா.
ஆனால் நாளுக்கு நாள் ஏமாற்றம் தான் அதிகரித்து கொண்டே போகிறது.அவரது மகன் எதற்காக கொல்லப்பட்டான் என்ற கேள்விக்கு விடை இன்னும் பிடிபடாமலேயே உள்ளது.
“இது அரசியலுக்கோ அல்லது பிரபலாமாகவோ நடந்த கொலை இல்ல.அரசியல் செல்வாக்குள்ள ஒரு நபரி கட்டளைப்படி யுவராஜ் செய்த திட்டமிட்ட படுகொலைங்க.அதான் உண்மைய கண்டுபிடிக்க முடியல. “ என தொடர்ந்து கூறினார் கலைசெல்வன்.
சேலத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவிலிருக்கும் ஓமலூரை அடுத்த சாஸ்த நகரில் ஒரு வீட்டில் நாங்கள் இருந்தோம். முதல் தளத்தில் இரு படுக்கையறை கொண்ட அந்த வீட்டின் மேல்தளம், சரியாக குறை தீர்க்கபடவில்லை. அந்த வீடு அவர்களுக்கு சொந்தமானது தான். அதன் கீழ்பகுதி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. சித்ராவின் மகனை கொன்றதாக கூறப்படும் கோகுல் ராஜ் நாமக்கலை சேர்ந்தவர். கொங்கு வெள்ளாளர் என்ற ஜாதியின் ஒரு அமைப்பின் தலைவர். அதே நாமக்கலில் உள்ள கல்லூரியில் தான் கோகுல்ராஜ் சென்று வந்தார்.
பிறப்பால் பறையரான கோகுல்ராஜ், கொலை செய்யபடுவதற்கு காரணமான குற்றம் ஒரு தலித்தாக பிறந்த அவர், தலித்துகளுக்காக உருவாக்கப்பட்ட சமூக விதிகளை மீறி நடந்தார் என்பதே ஆகும்.
கோகுல்ராஜ் ஒரு மாணவ தொழில் முனைவர். தனது நண்பனுடன் சிறிய அளவில் சிட்டி –பண்ட் தொழிலை நடத்தி வந்தார்.ஒவ்வொரு வாரமும் உறுப்பினராக சேர்ந்த நபர்களிடமிருந்து 100 ரூபாய் வீதம் வசூல் செய்து, அதில் வரும் தொகையை வேறொரு லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்து வந்தார்.பின்னர் தீபாவளி பண்டிகையின் போது அந்த வசூலித்த மொத்த தொகையுடன், போனஸ் தொகையும் சேர்த்து திருப்பி கொடுப்பார். அவர் ஒரு விளையாட்டு மையத்தையும் கூட நடத்தி வந்தார். தனது தொழில் கூட்டாளியான தினேஷுடன் சேர்ந்து பழைய டி.விக்களையும், அவற்றை வைத்து விளையாடுவதற்கான உபகரணங்களையும் வாங்கி இந்த மையத்தை உருவாக்கினார். மாணவர்கள் கூட்டமாக அந்த மையத்தில் வந்து விளையாடிவிட்டு செல்வது வழக்கம்.
கோகுல்ராஜ் நன்றாக உடை உடுப்பவர். பெண்களிடம் பயமோ,வேட்கமுமோ இன்றி சரளமான ஆங்கிலத்தில் கூட பேசுபவர். பள்ளியில் படிக்கும்போது ஆங்கில வழிக்கல்வியில் படித்தவர்
ஒரு பறையராக, தமிழ்நாட்டில் கோகுல்ராஜ் மேற்கூறியவற்றை எல்லாம் செய்ய அனுமதிக்கப்பட கூடாதவராக இருந்தார். அதனால் அவர், விலையாக தனது உயிரை கொடுக்க வேண்டியதாயிருந்தது.
ஜனவரி 23, 2015 கோகுல்ராஜ் தனது வகுப்பு தோழியான ஒரு மேல்ஜாதி பெண்ணுடன் திருச்செங்கோடு கோயிலில் வைத்து பேசி கொண்டிருந்தார். அப்போது யுவராஜ் தலைமை வகிக்கும் கொங்கு வெள்ளாள ஜாதி அமைப்பான தீரன் சின்னமலை பேரவையின் உறுப்பினர்கள் அங்கு வந்து கோகுல்ராஜை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.போலிசாரின் கூற்றுப்படி, கடத்தப்பட்ட கோகுல்ராஜ், பின்னர் ஒரு ஆளரவமற்ற மலைப்பகுதிக்கு யுவராஜால் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து வீடியோவில் பேசவும், தற்கொலை குறிப்பு எழுதவும் யுவராஜ், கோகுல்ராஜை நிர்பந்தித்துள்ளார். பின்னர் தனது டிரைவர் அருணின் உதவியால் யுவராஜ் கோகுல் ராஜின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவர்கள் கோகுல்ராஜின் கழுத்தை வெட்டி, உடலையும் தனியாக எடுத்து, தற்கொலை என்பது போல் காட்டி கொள்ள ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளனர். பின்னர் தலைமறைவாக அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்த யுவராஜ், வாட்ஸ் அப் மூலம் வெளியுலக தொடர்பில் இருந்தார். அவற்றில் கோகுல்ராஜ், உயர்ஜாதி பெண்களுடன் தைரியமாக தொடர்பு கொண்டிருந்தது மிகப்பெரிய பாவம் என பிரச்சாரங்கள் செய்தார்.
கோகுல்ராஜின் குடும்பத்தினர் அனைத்தையும் மறக்க விரும்பினாலும், உண்மையில் என்ன நடந்தது என்பதை அறியும் வரை அவர்களால் அவ்வாறு மறக்க முடியபோவதில்லை. “ கோகுல்ராஜின் நண்பன் கார்த்திக், அவன கடத்தும்போது கூட இருந்த பொண்ணு சுவாதி இவங்க ரெண்டு பேரையும் இன்னும் அவங்க விசாரிக்கல. எதோ ஒண்ணு வெளியில சொல்ல கூடாதது இருக்குன்னு அவங்களுக்கு தெரியுது. போலீசு எதையோ மறைக்குது.” என்று சொல்கிறார் சித்ராவின் தந்தையான கணேசன்.
“ ஜாதி கௌரவத்துக்கு அல்லது யுவராஜின் அரசியலுக்கு தான் இந்த கொலை நடந்துதுன்னா எதுக்கு ஆரம்பத்துல இத தற்கொலை மாதிரி காட்டனும் ? “ என கேட்கிறார் கலைசெல்வன்.
இதில் உள்ள மர்மம் குழப்பமடைய செய்தாலும், கொல்லப்பட்ட முறை நம்மை திடுக்கிட செய்கிறது.கோகுல்ராஜின் தலை “துண்டாக்கப்பட்டிருந்தது” என பரவலாக செய்தி வெளியானாலும், அந்த வார்த்தை இந்த கொலையில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தை மறைத்திருந்தது. “ அவனுடைய முகம் இரு கோணத்தில சிதைக்கப்பட்டிருந்தது. தலையின் பின்புறம் உடைக்கப்பட்டிருந்தது.” என கூறுகிறார் கலைசெல்வன்.
“அவனது ஒரு பகுதி துளைக்கப்பட்டிருந்தது.அதனால் அவன் முகம் சிதைந்து ஒரு கண் வெளியே வந்து காணப்பட்டது. அவனது கழுத்து வெட்டப்பட்டு தலை அகற்றப்பட்டிருந்தது.” என கலைச்செல்வன் கோபத்துடன் விளக்க, அவரது அம்மா சித்ரா அழ துவங்கினார்.
“ என்னோட மகன் இப்படியெல்லாம் அனுபவிக்க என்ன தப்பு செய்தான் ? “
தங்களுக்கு எந்தவித உதவியும் எவரிடமிருந்தும் வரவில்லை என இக்குடும்பத்தினர் கூறுகின்றனர்.” போலீசு எங்களுக்கு எதிரா தான் செயல்பட்டது. சி.பி.சி.ஐ.டிகாரங்க எல்லா சைடையும் ஒன்றும் விசாரிக்கல” என கூறினார் கணேசன்.
ரோகித் வெமுலாவின் தற்கொலையை தொடர்ந்து நாட்டில் உள்ள பலதரப்பட்டவர்களும் பல்கலைகழக வளாகத்தில் போராட குவிந்துள்ளனர். ” ராகுல்காந்தி இருமுறை போயுள்ளார்.உண்ணாவிரதம் கூட இருந்துள்ளார்.ஆனா எங்களுக்கு ஏன் யாருமே உதவ முன்வரல ? நாங்கள் இந்தியர்கள் இல்லையா ? தேசிய கட்சிகள கூட விடுங்க.உள்ளூர் கட்சிங்க கூட எங்களுக்கு உதவலையே” என கேட்கிறார் கலைசெல்வன்.
திராவிட கட்சிகளின் தோல்வியையும், கபட நாடகத்தையும் அம்பலபடுத்த கோகுல்ராஜ் வழக்கே போதுமானது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட சில தலித் கட்சியினர் கொலை நடந்ததை தொடர்ந்து உடனடியாக எங்களுக்கு உதவிசெய்ய வந்தனர். பின்னர் இடதுசாரி கட்சிகளும் வந்தனர். ஆனால் இரு திராவிட கட்சிகளிலிருந்தும் ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. என கூறுகின்றனர் இந்த குடும்பத்தினர்.திமுக தலைவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு அறிக்கை விடுகிறார். ஆனால் அவரது கட்சியிலிருந்து எவரும் கோகுல்ராஜ் மரணத்திற்கு பின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்ய வரவில்லை.
“சின்ன சின்ன நிகழ்வுகளுக்கு எல்லாம் அறிக்கை விடும் முதலமைச்சர் இந்த சம்பவத்த பற்றி ஒரு அறிக்கையும் விடல. டிஎஸ்பி விஷ்ணு பிரியா இறந்த பிறகு தான் அறிக்கை விட்டாங்க. ஆனாலும் சிபிஐ விசாரணை நடத்த கேட்கல .” என கலைச்செல்வன் கூறினார். டிஎஸ்பி விஷ்ணு பிரியா, கோகுல்ராஜ் வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டவர்.அவர் கடந்த செப்டம்பர்,18 2015 அன்று நாமக்கலில் உள்ள தனது அரசு வீட்டில் வைத்து சீலிங் பேனில் தூக்கு தற்கொலை செய்து கொண்டார். அவரும் ஒரு தலித் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு பிரியாவின் குடும்பத்தினரும் அவரது தற்கொலைக்கு பின்னில் சதிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.இரு வழக்குகளும் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Translation by John Moses