சுவாதி கொலை வழக்கில், நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தையும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புத்தக விற்பனைக்காரரும் ராம்குமாரை அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், செவ்வாயன்று காலையில் சென்னை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அப்போது குற்றவாளியை அடையாளம் காட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் முதலில் அழைக்கப்பட்டார். அப்போது வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 10 பேரில் ஒருவரை அவர், தனது மகளை கொன்ற நபராக அடையாளம் காட்டினார். இடமிருந்து நான்காவதாக நின்று கொண்டிருந்த அந்த நபர் ராம்குமார் தான் என கூறப்படுகிறது.
மேலும், சுவாதி கொலைச் செய்யப்படும் போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்ட சாட்சிகள் அடையாள அணிவகுப்பிற்காக அழைத்து வரப்பட்டனர்.
இதனிடையே, சுவாதி தனது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனிடம் படுகொலைக்கு முன், தன்னை தொந்தரவு செய்த நபர் என ராம்குமாரை காட்டி கொடுத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரையும் வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இது போன்றே, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புத்தகக்கடை நடத்தி வரும் சிவகுமார் என்பவரும் மற்றொரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த புத்தகக் கடையானது, சுவாதி தாக்கப்பட்ட பகுதிக்கு வலது பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த புத்தகக் கடையை சிவகுமாரும் அவரது மனைவியும் ஷிப்ட் அடிப்படையில் விற்பனை செய்து வருகின்றனர். சுவாதி கொல்லப்பட்ட அன்று காலை கணவர் சிவகுமார் தான் புத்தக விற்பனையை கவனித்து வந்தார். அவரும் கொலையாளியை அடையாளம் காட்டினார் என கூறப்படுகிறது.