திமுக புதன்கிழமையன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அக்கட்சி, முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமியை அதிமுக வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக ஆத்தூரில் களமிறக்கியுள்ளது.
பெரியசாமி 1989, 1996, 2006 , மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் ஆத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட பெரியசாமி ஒருமுறை வருவாய் துறை அமைச்சர் பதவியையும் வகித்தவர்.
அவர், ஆத்தூரில் 1991 மற்றும் 2001 தேர்தல்களில் மட்டும் அதிமுகவிடம் போட்டியிட்டு தோற்றார்.
மறுமுனையில் போட்டியிடவிருக்கும் நத்தம் விஸ்வநாதனோ, 2001,2006, 2011 ஆகிய தேர்தல்களில் தனது சொந்த தொகுதியான நத்தத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்த நத்தம் விஸ்வநாதன், தற்போது அந்த லிஸ்ட்டில் அவர் இடம்பெறவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தை போலவே நத்தம் விஸ்வநாதனும் ஜெயலலிதாவின் நம்பிக்கையை இழந்துள்ளார்.
அதிமுக, நத்தம் விஸ்வநாதனை தனது சொந்த தொகுதியிலிருந்து ஆத்தூருக்கு மாற்றி போட்டியிட செய்வது இந்த அதிருப்தியை தெளிவாகவே காட்டுகிறது.
தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னரே துவங்கியிருந்தாலும், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு கடும் போட்டியாகவே இந்த தொகுதி இருக்கும்.