தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூட்டணி குறித்து ஊடகங்கள் தனக்கு பாடம் நடத்த தேவையில்லை என கூறினார்.
கடந்த சில நாட்களாக, திமுகவுடனும், பாரதீய ஜனதாவுடனும் அவரது கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
திமுக வட்டாரத்திலிருந்து, சில நாட்களுக்கு முன் விஜயகாந்த் திமுக கூட்டணியில் தான் இணைவார் என நியூஸ் மினிட்டிடம் உறுதியாக கூறப்பட்டது. இருப்பினும், திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன தவறு நடந்தது என தெளிவாக தெரியவில்லை.
இதனிடையே, பிஜெபியும் கூட தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு எடுத்த பல முயற்சிகளும் வீணாகி போனது.
கூட்டணி குறித்த வெளியான செய்திகள் அனைத்தையும் நிராகரித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தான் தனித்து போட்டியிடப்போவதாக கூறினார்.
விஜயகாந்தின் அறிவிப்பிற்கு சற்று முன், அவரது மனைவி பிரேமலதா, திமுக,அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு, அதிமுகவிற்கும், திமுகவிற்கு 2ஜி வழக்கும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவ ஊழலும் உள்ளன என கூறிய அவர், இந்த கட்சிகள் எல்லாமே, ஊழல் கட்சிகள் என குற்றஞ்சாட்டினார்.
விஜயகாந்த் தனித்து போட்டி என அறிவித்தாலும், கடைசி நிமிடத்தில் சில கூட்டணி மாற்றங்கள் ஏற்பட கூடும். பிஜெபி போன்ற கட்சிகள், கேப்டன் அணியில் சேருவதற்கும் வாய்ப்பு உண்டு.