டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகம் பதட்டத்தால் நிறைந்துள்ளது. அங்கே தான், அப்பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், அப்சல் குரு தூக்கில் இடப்பட்டதை கண்டித்தும், தேச விரோத கோஷங்கள் எழுப்பியதாகவும் கூறி தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரான டி.ராஜாவின் மகளும், ஏஐஎஸ்பின் தலைவர்களுள் ஒருவருமான அபரஜிதாவும் இந்த போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தார். பிஜெபி தலைவர்களுள் ஒருவரான மகேஷ் கிரி சில வீடியோக்களின் ஸ்கிரீன்கிராப்புகளை போட்டு, அபரஜிதாவும் தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து டி.ராஜாவிடம் நியூஸ் மினிட் சார்பில் கருத்து கேட்டபோது “ ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் எதுவும் தவறாக ஒன்றும் செய்துவிடவில்லை. அவர்கள் தேச பக்தர்களா? அல்லது தேசியவிரோதிகளா என தீர்மானிப்பதற்கு இவர்கள் யார் ? “ என கேட்டார். தொடர்ந்து பேசிய அவர் “ எனது மகளை குறித்து நான் பெருமிதம் கொள்ளுகிறேன். அவரின் தந்தையாக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒரு குடிமகனாக நான் பெருமைபடுகிறேன். அவர் ஒரு தேச பக்தர்” என்றார்.
டி.ராஜாவுக்கு எண்ணற்ற மிரட்டல் போன்கள் வந்ததாக கூறினார். அவ்வாறு வந்த அழைப்புகள் அனைத்துமே பிஜெபியினரிடமிருந்து வந்ததாக கூறும் அவர், “ எதற்கு நீங்கள் ஆளும்கட்சிக்கு எதிராக போராடுகிறீர்கள் ?” என்று கேட்டஅழைப்புகளாக இருந்தன என்றார்.இது போன்றே தனது மகளுக்கும் மிரட்டல் வந்ததாக கூறினார்.” இதனை குறித்து நான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசினேன். அவர் என்னிடம் ஒரு சாதாரண புகாரை அளிக்க சொன்னார். ஆனால் அவர் எங்களுக்கு எதிரான எதிர்ப்புகளை நிறுத்த சொல்வது பற்றி எதுவும் கூறவில்லை.” என்றார்.
சந்தேக அடிப்படையில் தற்போது டெல்லி போலீசார்,ராஜாவின் மகள் உட்பட 10 ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்களை கைது செய்ய தீர்மானித்துள்ளது. இதுபற்றி கூறும்போது “ அதுபற்றி எதுவுமே தெளிவாக தெரியவில்லை. அப்படி எதுவும் நடவடிக்கை எடுத்தால், நாங்களும் தேவையானதை செய்வோம்” என்றார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும், பல்கலைகழக வளாகத்தில் கோஷம் எழுப்பிய குழுவினரை விமர்சித்துள்ளார். ஏபிவிபி உறுப்பினர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே இது தொடர்பாக மோதல் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அஜய் மக்கான், ஆனந்த் சர்மா, இடது சாரி தலைவர்கள் சீத்தாராம் எச்சூரி, டி.ராஜா , ஐக்கிய ஜனதா தாள் தலைவர் கேஸி தியாகி ஆகியோர் பல்கலைகழக வளாகம் சென்று மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தலைவர்கள் கன்னையா குமார் தேசத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பவில்லை எனவும், ஆர்எஸ்எஸ், பிஜெபி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதிஇராணியையும் தான் விமர்சித்துள்ளனர் என்றும் அல்லாமல் வேறு எந்த தவறும் செய்யவில்லை எனவும் கூறினர்.