சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் மதுவிற்பனை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, பீர் மதுவகையின் விற்பனை அளவு 37 சதவீதமும், பிற மதுபான வகைகள் 7 சதவீதமாகவும் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், “ தேர்தல் ஆணையம், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக மது வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாது, வரும் மேய் 14 முதல் 19 ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படியும் உத்தரவிடப்பட்டுது.” என கூறினார்.
மேலும் அவர் மேய் மாதம் 12 ஆம் தேதி முதல், மொத்தமாக மதுபானங்களை வாங்கிச் செல்வோர் மீதும், மதுபானம் அடங்கிய பாட்டில்களை குவியல்களாக வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
“தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக நான்கு புள் பாட்டில்களை தனது வீட்டில் வைத்திருக்கலாம். அதற்கும் மேல் மதுபாட்டில்கள் உள்ளதாக தகவல் கிடைத்தால், அந்த பகுதியை சோதனை செய்து, தக்க நடவடிக்கை எடுப்போம்.” என்றார் ராஜேஷ் லக்கானி.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 300 கம்பெனிகள் துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்கு பதிவு நடைபெறும் நாள் முதல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர் என ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.