பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைக்கு விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விஜய் டிவியின், தலைமை நிகழ்ச்சி பொறுப்பாளர் பிரதீப் மில்ராய் பீட்டர் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், “ இந்த நிகழ்ச்சிகாக உள்ள எங்கள் விதிமுறைகளில், எங்குமே சினிமாத்துறையிலிருந்து வருபவர்களோ அல்லது பின்னணி பாடகர்களோ கலந்து கொள்ள கூடாது என குறிப்பிடப்படவில்லை. அவரது முதல் நேர்காணலை ஒளிபரப்பிய போது, அவர் தான் பின்னணி குரலாக பாடல்கள் பாடியுள்ளதையும், ஆனால் பிரபலம் ஆகவில்லை என்றும், அதனால் உலகம் தன்னை கவனிப்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த முழு செய்தியையும் வெளியிட்ட நபர்கள், அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு, அவர் ஒரு பின்னணி பாடகர் என்பதும், அவர் எதையுமே மறைக்கவில்லை என்பதுவும் தெரியும்.
நீங்கள் நினைப்பதை போல் அல்லாமல், ஒரு பின்னணி பாடகர், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருகிறார் எனில், அது எங்களுக்கு பெருமை தானே ?
ஆரம்ப காலகட்டங்களில், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பின்னணி பாடகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை என கூறியிருந்தோம். ஆனால், நாங்கள் குரல் தேர்வு செய்யும் போது, நூற்றுக்கணக்கான மக்கள், தொழில் ரீதியாக, இயக்குநர்களாகவோ அல்லது பக்தி பாடல் ஆல்பங்களை வெளியிட்டவர்களாவோ இருந்தனர். எனவே இந்த விதிமுறையை நாங்கள் அகற்றினோம். சூப்பர் சிங்கர் சீனியரில் இரு சீசன்களுக்கு முன்னர் இந்த விதிமுறை அகற்றப்பட்டது. எனவே அந்த விதிமுறை தற்போது செல்லுபடியாகாது” என்றார்