Tamil Nadu

திருமணமாகாத ஜோடிகள் ஒரே ஓட்டல் அறையில் தங்குவது சட்டவிரோதமானதா?

Written by : Monalisa Das

திருமணமாகாத பெண்  ஒரு ஆணுடனோ அல்லது திருமணமாகாத  ஆண் ஒரு பெண்ணுடனோ ஒரே ஓட்டல் அறையில் தங்க முடியுமா ? இப்படியொரு கேள்வியை கேட்டால் , இக்காலத்தில் ஒரு காலாவதியான கேள்வியாகவே அது பார்க்கப்படும். ஆனால் நிச்சயம் அது முடியாது என்கின்றனர் ஓட்டல் துறையினர்.

புனேயிலிருந்து ஆறு மாணவர்கள், 4 ஆண்களும், 2 பெண்களுமாக கேரளாவை சுற்றி பார்க்க கடந்த வருடம் அக்டோபரில் வந்திருந்தனர். அவர்கள் ஓட்டலில் அறை எடுக்க சென்றபோது, திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்குவதற்கு ஓட்டலில் அறை தரமுடியாது என சொல்லப்பட்டது.

அவர்களில் ஒரு மாணவர் நியூஸ் மினிட்டிடம் பேசிய போது” நாங்கள் இங்கு வருவதற்கு முன்னர் எந்த ஓட்டலிலும் அறைகள் முன்பதிவு செய்யவில்லை.நாங்கள் நேரடியாக மூன்று ஓட்டல்களில் சென்று தங்குவதற்காக அறை கேட்டோம்.ஆனால் அவர்கள் நாங்கள் திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை வாடகைக்கு விடுவதில்லை என கூறி நாங்கள் தங்குவதற்கு அறையை தரமறுத்துவிட்டனர்.  என்றார்.

உண்மையில் திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்குவதற்கான அறையை நிராகரிப்பதில் ஓட்டல்களுக்கு சட்டபூர்வ உரிமை உள்ளதா  ? என கேட்டால் வழக்கறிஞர்களும், இந்திய ஓட்டல்கள் அசோசியஷன் அதிகாரி ஒருவரும் இல்லை என்றே கூறுகின்றனர்.

“மணமாகாத ஜோடிகள் ஒரே அறையில் தங்குவதை தடுக்கும் வகையில் ஒரு சட்டமும் இல்லை. சேர்ந்து தங்குவது என்பது தனிநபர் விருப்பத்தை பொறுத்தது. அது சுதந்திரமான செயல்பாடுகளின் கீழ் வருவது.” என கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

இந்தியாவில் உள்ள 280 க்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளை மேற்பார்வையிடும் ஹோட்டல் அசோசியஷன் ஆப் இந்தியா (எச்.ஏ.ஐ) அமைப்பினர், அப்படியொரு எந்த நிபந்தனையும் இல்லை என்கின்றனர். “ அப்படியொரு விதிமுறை உள்ளதாக எங்களுக்கு தெரியவில்லை “ என்கிறார் எச்.ஏ.ஐ அமைப்பின் செய்தி தொடர்பாளர் பாரத் பூஷன்.

எச்.ஏ.ஐ.,யின் இந்த நிலைப்பாடு, மணமாகாத ஜோடிகளுக்கு தங்க அறை வழங்குவதை மறுப்பது ஒரு ஏற்கப்பட்ட நடைமுறையாக உள்ளதை போன்றே தெரிகிறது.

இந்த நடைமுறையை பற்றி புரிந்து கொள்ள, முன்னணி இணைய முன்பதிவு நிறுவனங்களான மேக்மைட்ரிப் ,கிளியர்ட்ரிப் போன்றவற்றின்   முன்பதிவுக்கான நிபந்தனைகளை பார்த்தாலே போதுமானது.

“ அட்மிஷனை நிறுத்திவைக்க ஓட்டலுக்கு உரிமை உள்ளது. ஓட்டலில் நுழையும்போது விருந்தினர்கள், கணவன்-மனைவி என்பதற்கான  தகுந்த ஆவணங்களை காட்டவில்லை எனில் தங்குவதற்கான வசதியை மறுக்க முடியும். மேற்சொன்ன காரணத்துக்காக ஓட்டலில் தங்க அனுமதி மறுக்கப்பட்டால் கிளியர்ட்ரிப் எந்த வகையிலும் பொறுப்பேற்காது” என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதனை நியூஸ் மினிட்டிற்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் கிளியர்ட்ரிப் உறுதி செய்துள்ளது.” இவைகள், ஓட்டல்களால் நிறைவேற்றப்பட்ட பொதுவான கொள்கைகள். இதனை, எங்கள் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் எங்கள் வாடிக்கையாளர்கள், தெரிந்துகொள்ள வசதியாக வெளியிட்டுள்ளோம்.”

மேக்மைட்ரிப்பும் கூட இதே கொள்கையினை கொண்டுள்ளது.

நியூஸ் மினிட் சார்பில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஓட்டல்களை தொடர்பு கொண்டு மணமாகாத ஜோடிகளுக்கு தங்க அறை வழங்குவதில் உள்ள அவர்களது நிலைப்பாட்டை கேட்டோம். அவைகளிலும், கேரளா ஓட்டல்களை போன்ற பதிலே வந்தது.

அவற்றில் சில ஓட்டல்களில் மணமாகாத ஜோடிகளுக்கு உறுதியாக அறை கொடுக்கமுடியாது என்றனர். சில ஓட்டல்களில் குழப்பமான பதிலையும் தந்தனர்.

எந்தவித அதிகாரபூர்வ வழிகாட்டு முறைகளும் இல்லாத நிலையில்  ஓட்டல்களின் இத்தகைய முடிவு ஒழுக்க கொள்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டவை என்பதே நம்மால் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.

மணமாகாமல் ஒன்று சேர்ந்து வாழ்வது கடந்த பல பத்தாண்டுகளாக சமூகத்தில் விலக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் 2013 இல் இந்திய உச்சநீதிமன்றம்” மணமாகாமல் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் சமூக ரீதியாக ஏற்றுகொள்ளப்படவில்லை, எனினும் அது ஒரு குற்றமாகவோ  அல்லது பாவமாகவோ கருத முடியாது.” என கூறியது.

மணமாகாத ஜோடிகளுக்கு தங்க இடம் கொடுக்கும் ஓட்டல்கள், அத்தகைய சூழலில் அவர்களிடம் கணவன் –மனைவி என தங்கள் பதிவேட்டில் குறிப்பிட வலியுறுத்துகின்றனர். தங்கள் பாதுகாப்பிற்காகவே இதை செய்வதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

“ அரசு தரப்பில் மணமாகாத ஆணும்,பெண்ணும் ஒரு சேர தங்க, அறை ஒதுக்குவதற்காக எந்த வித விதியும் வகுக்கப்படவில்லை.ஓட்டல்களே அதற்கான விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன. மணமாகாத ஜோடிகள் சட்டவிரோதமான செயல்களில் ஏதேனும் ஈடுபட்டு பிடிபட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டலும் பெரிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரிடும்.அத்தகைய பிரச்சினைகளை தவிர்க்கவே ஓட்டல்கள் இத்தகைய விதிமுறைகளை வைத்துள்ளன “ என விளக்கும் பெங்களூரு ஓட்டல் அசோசியேஷன் செயலாளர் ராமமூர்த்தி, “ என்ன நோக்கத்திற்காக ஒரு மணமாகாத ஆணும்,பெண்ணும் ஒரே அறையில் தங்க விரும்புகின்றனர் ? “ என கேள்வி எழுப்புகின்றார்.

எழுதப்பட்ட விதிகளை எதிர்கொள்ள சட்ட வழிகள் இருக்கையில்,எழுதப்படாத காரணங்களை சொல்லி மறுப்பது  சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் விருப்புரிமை என சுட்டிக்காட்டப்படுகிறது. பெரும்பாலான ஓட்டல்களும் போலீஸின் திடீர் சோதனைகளை கண்டு பயப்படுகின்றன.

மணமாகாத ஜோடிகள் தங்குவதற்கான அறைகளை பதிவு செய்து கொள்ள சட்டம் ஒருபோதும் தடுக்கவில்லை. ஆனால் எழுதப்படாத விதிகள் மூலம் நிராகரிக்க ஓட்டல் நிர்வாகத்திற்கு உள்ள உரிமையை எதிர்கேள்வி எழுப்பவும் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

In Holenarsipura, Deve Gowda family’s dominance ensures no one questions Prajwal

A decade lost: How LGBTQIA+ rights fared under BJP govt and the way forward

JD(S) leader alleges Prajwal Revanna threatened with gun, sexually assaulted her for 3 years

Telangana police closes Rohith Vemula file, absolves former V-C and BJP leaders

Who spread unblurred videos of women? SIT probe on Prajwal Revanna must find