24 வயதான இன்போஸிஸ் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், சென்னை போலீசார் இந்த வழக்கில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளனர்.
போலீசார் சுவாதியை கொன்றவர் என ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.
ராம்குமாரை பற்றி சில தகவல்கள்
22 வயதான ராம்குமார் திருநெல்வேலியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த மீனாட்சிபுரம் என்ற பகுதியை சேர்ந்தவன்.
திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த அவன், பின்னர் வேலை தேடுவதற்காக சென்னை வந்துள்ளான். சென்னையில் ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலைபார்த்தபடியே, வேறு வேலை தேடியதாக உறுதிப்படுத்தவியலாத ஒரு தகவலும் கூறப்படுகிறது.
சூளைமேட்டில் உள்ள ஒரு மேன்சனில் அவன் கடந்த சில மாதங்களாக தங்கி வந்தான். சூளைமேட்டில் தான் சுவாதியும் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் சௌராஷ்டிரா நகரில் வசிக்கவே, சுவாதியின் வீடு அதற்கு அருகாமையில் எதிர்புறத்தில் இருந்த கங்கை அம்மன் கோயில் தெருவில் இருந்தது.
சென்னை போலீசார், ராம்குமாரின் உருவத்தை முழுவதுமாக வெளியிட்டதுடன், அவன் தங்கியிருந்த மேன்சனின் நிர்வாகியும், செக்யூரிட்டியும் அவனை அடையாளம் கண்டு அவனைக் குறித்த தகவலை போலீசாருக்கு கொடுத்தனர்.
ராம்குமார் தான் தங்கியிருந்த இந்த அறைக்கு கடந்த ஒரு வாரமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாதி கொல்லப்பட்ட தினத்திலிருந்தே அவரது மொபைல் போணும் காணப்படவில்லை. ஆனால் கொலை நடந்த பின்னரும் சில மணி நேரங்களுக்கு சூளைமேடு அருகே அந்த போண் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருந்தது.
போலீசார், கொலை நடந்த பின்னர் சுவாதியின் மொபைல் போணும், ராம்குமாரின் மொபைல் போணும் சில மணி நேரத்திற்கு செயலில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து, ராம்குமாரின் அறையை சோதனையிட்ட போலீசார் சில ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து நெல்லை போலீசாரை உஷார்படுத்தினர்.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட எஸ்பி விக்ரமன் தலைமையிலான போலீஸார், ராம்குமாரின் வீட்டை சுற்றி வளைத்தனர். அதனை தொடர்ந்து, குற்றவாளி ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
இதனையடுத்து, தென்காசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராம்குமாருக்கு 18 தையல்கள் போடப்பட்டுள்ளன.
அவனது தந்தை பரமசிவம் மற்றும் சகோதரர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராம்குமார் கைது பற்றி, சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, போலீசார் தகவல் தெரிவிக்கும் வரை தனக்கு எதுவுமே தெரியாது என கூறினார்.
Also read: