திருச்சியில் உள்ள பேன்சி ஸ்டோருக்கு, வேலைக்கு செல்ல முத்துலட்சுமி கட்டாயப்படுத்தப்பட்டபோது அவருக்கு வயது 9 தான் ஆகியிருந்தது. கடந்த 2009 இல் அவர் மீட்கப்பட்டு, மறு வாழ்வு அளிக்கப்பட்டார். இன்று 500 க்கு 454 மதிப்பெண்கள் பெற்ற பெருமைமிகு மாணவியாக உருவெடுத்துள்ளார் அதே முத்துலெட்சுமி.
மெதுவான குரலில், தனது வயதினையும், பெயரையும் கூறியபடியே நம்மிடம் பேச்சு கொடுத்தார் முத்துலெட்சுமி. 16 வயதான அவர், அமைதியான தோற்றத்துடன் இருந்தாலும், அவரது மகிழ்ச்சி எளிதில் தெரியக் கூடியது.
முத்துலட்சுமியின் தந்தை அழகன், அவருக்கு 9 வயதாகும் போது, அவர்களது குடும்பத்தை விட்டு சென்று விட்டார். அதனை தொடர்ந்து ஏற்பட்ட குடும்ப வறுமையின் காரணமாக அந்த ஆண்டிலிருந்தே பேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலைக்கு செல்ல அவரது தாய் அவரை நிரபந்தித்தார். அவரது தாய் தனலட்சுமி கட்டிட வேலைகளுக்கான கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். “ நான் வேலைக்கு செல்ல துவங்கியதும், கடை உரிமையாளர் என்னை அதிக அளவில் திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். போகபோக நான் அவற்றை பழகி கொண்டேன்.” என கூறுகிறார் முத்துலட்சுமி.
பின்னர் கல்வி ஆய்வாளர் ஒருவரால் மீட்கப்பட்ட அவர்,உறையூரில் தேசிய குழந்தை தொழிலாளர் மீட்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மையம் ஒன்றில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். அதனை தொடர்ந்து, கே.ஏ.பி.விஸ்வநாதன் மேல்நிலைப்பள்ளியில் மேல்படிப்பிற்காக சேர்க்கப்பட்டார்.
இங்கும், கல்வி கற்பது அவருக்கு எளிமையானதாக இருந்துவிடவில்லை. 14 வயது நிறைவடைந்ததும் மீண்டும் அவர், தனது பள்ளி நேரம் போக மாலையில் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார். “ நான் ஒரு கடையில் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை வேலை செய்ய துவங்கினேன்” என்கிறார் அவர்.
மேலும் அவர் “எங்கள் குடும்ப பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நான் மாதம் 3000 ரூபாய் சம்பாதித்து எனது வீட்டிற்கு கொடுத்து வந்தேன்” என கூறினார்.
ஆனாலும் பகுதி நேர வேலைகளில் தன்னை சுருக்கி கொள்ள முத்துலட்சுமி விரும்பவில்லை. 12 ஆம் வகுப்பு படித்து முடித்து பின்னர் பி.காம் படிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் வங்கி மேலாளராக வேண்டும் என்ற கனவுடன் உள்ளார் முத்துலட்சுமி.
“2009 முதல் எங்கள் திட்டத்தில் இணைந்த பின்னர் முத்து லட்சுமி நல்ல ஒரு மாணவியாக இருந்தார்” என கூறுகிறார் திருச்சியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் பெர்லின்.
பல குழந்தைகள் ஏன் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர் என்ற கேள்விக்கு இரு காரணங்களை கூறுகிறார் அவர். “ ஒன்று, குடும்ப பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு செல்வது. மற்றொன்று குழந்தைகள் படிப்பின் மீதுள்ள ஆர்வக் குறைவின் காரணமாக வேலைக்கு செல்கின்றனர். முத்துலட்சுமி விவகாரத்தில், அவளது தந்தை சின்ன வயதிலேயே அவர்களை விட்டு சென்றுவிட்டார். குடும்பத்தை நடத்தி செல்ல போதிய வருமானம் இல்லாத சூழலில், அவரது தாய், அவரை வேலைக்கு அனுப்பியுள்ளார்.” என கூறினார் அவர்.
சீர்ஸ் என்ற அவரது தோண்டு நிறுவனம், வேலைக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களின் மனதை மாற்றி அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணிகளை செய்து வருகிறது.