90 % சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்

Tamil Friday, May 27, 2016 - 16:45

 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பால்காரர்கள், பேப்பர் போடுபவர்கள் மற்றும் ரவுடிகளை பயன்படுத்தி பண விநியோகம் நடந்ததாக பொது தேர்தல் துறையினர், தேர்தல்  ஆணையத்திற்கு சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கட்சிக்காரர்கள் இத்தேர்தலில் அதிக அளவில் பணம் குடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், 691 புகார்கள் பெயர்கள் இல்லாத கவரில் பணத்தை போட்டு வாக்காளர்களுக்கு வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு 22 புகார்கள் பேப்பர் போடுபவர்கள் மூலம் பணம் விநியோகிக்கப்பட்டதாகவும் பதிவாகியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியுதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பேப்பர் போடுபவர்கள் மற்றும் பால்க்காரர்கள் பணம் விநியோகித்ததாக பெறப்பட்ட 34 புகார்களில் 29 புகார்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் பணம் விநியோகத்தில் ஈடுபட்டதற்கான புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக வந்த 36 புகார்களில் 29 புகார்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 5825 கட்சிக்காரர்கள் பணம் விநியோகித்ததாக பெறப்பட்ட புகார்களில் 5463 புகார்கள்  மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.

இலவசங்கள் கொடுத்ததாக 146 வழக்குகளும், இலவசங்கள் வழங்குவதற்காக டோக்கன் கொடுத்ததாக 34 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.