தலித் இளைஞர் சங்கர் படுகொலையில் தேடப்பட்டு வந்த 9 குற்றவாளிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேரை போலீசார், கோயம்பத்தூர் மத்திய சிறையில்அடைத்துள்ளனர்.
கோர்ட்டில் சரணடைந்த,கௌசல்யாவின் தந்தை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதே நேரம், கௌசல்யாவின் தாயாரும், மாமனாரும், தலைமறைவாகிவிட்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொரு நபரை போலீசார் இதுவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
திண்டுக்கல்லிருந்து செல்வகுமார்,மதன்,மணிகண்டன் ஆகியோரும், திருநெல்வேலியிலிருந்து மணிகண்டனும் சங்கரை கொல்ல கௌசல்யாவின் மாமா, பாண்டித்துரை மற்றும் கௌசல்யாவின் அப்பா சின்னசாமி ஆகியோரால் அழைத்துவரப்பட்டுள்ளனர்.இரண்டு குற்றவாளிகள் ஒரு பைக்கிலும், மீதமுள்ள மூன்று குற்றவாளிகள் மற்றொரு பைக்கிலும் சென்று இந்த கொலையை செய்துள்ளனர். செல்போன் உரையாடல்களின் பதிவுகளின் அடிப்படையில், இவர்கள் அனைவரும், கொலை நடப்பதற்கு முன்னும், கொலை நடந்த பின்னரும் கௌசல்யாவின் தந்தையுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
கௌசல்யாவின் தந்தை, இந்த கொலை நடந்த மறுதினமே திண்டுக்கல்லில் உள்ள நிலக்கோட்டை மஜிஸ்திரேட் முன் சரணடைந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும், இந்த கொலைக்கு முக்கிய ஆதாரங்களாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளன.