2016 சட்டமன்ற தேர்தலுக்காக, அதிமுக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அம்மா, லேட்டாக தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் லேட்டஸ்டான ஒன்றாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் விலைமதிப்புள்ள இலவசங்களை வாக்குறுதியாக அளிக்கவே தாமதத்திற்கு காரணம் என்று ஒரு தகவலும் பரவி வருகிறது.
இந்த தகவல்கள் உண்மையெனில், தமிழ்நாட்டு அரசியலின் ராணியாக வலம் வரும் ஜெயலலிதா, தனது அரசியல் எதிரிகளான திமுக, மநகூ மற்றும் பாமக ஆகியவற்றை குறித்து கவலைபடவேண்டிய தேவை எழபோவதில்லை. இந்த கட்சிகள் எல்லாம் தற்போது இலவசங்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. ஆனால் ஜெயலலிதாவோ ஒரு முறை கூட இலவசங்களை வாக்குறுதியாக அள்ளி வீசி மக்களிடம் வாக்குகளை கேட்கலாம் என்று நினைப்பதாகவே தோன்றுகிறது.
ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையை இதுவரை வெளியிடாததன் மர்மம் என்ன என்பதற்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு இரு காரணங்களை கூறுகிறது. ஒன்று, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மிகப்பெரிய இலவசங்களை மீண்டும் வாக்குறுதியாக கொடுத்து, தனது அரசியல் எதிரிகளை நிராயுதபாணியாக மாற்றுவது. இரண்டு, இலவசங்களின் அறிவிப்பால் ஏதேனும் சட்ட பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்தல்.
என்ன இருந்தாலும் சில ரகசியங்கள் வாட்ஸ் குழுக்கள் மூலம் கசியதான் செய்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவும், விகடனும் இதுகுறித்து வெளிவந்த ஊகங்களை எழுதியுள்ளனர்.
அம்மா குடி தண்ணீர், அம்மா உணவகம், அம்மா பேபிகிட், அம்மா சிமென்ட் போன்ற இலவசங்களை தொடர்ந்து, மக்கள் இலவச எல்.சி.டி, டிவிக்களையும், இலவச பிரிட்ஜ் ஏன் ? வாசிங்மெசினை கூட இலவசமாக பெறுவதற்கு எதிர்பார்க்கிறார்கள். சரி. இதெல்லாம் உபயோகிக்க மின்சாரத்துக்கு எங்கே போவது என்ற கேள்வி கூட உங்களுக்கு எழலாம். அந்த மின்சாரம் கூட இலவசமாக கிடைக்க போகிறது.
இந்த இலவசமும் உங்களுக்கு போதுமானது அல்ல என நீங்கள் கருதினால், அம்மா கூடுதலாக ஒரு மோட்டார் சைக்கிளும் இலவசமாக தர ஆலோசித்து வருகிறாராம்.
வாட்ஸ் அப் குழுக்களில் உலா வரும் இலவசங்களின் பட்டியல் இதோ.
1. இலவச எல்.சி.டி டிவி.
2. 200 யூனிட் இலவச மின்சாரம்
3. இலவச பிரிட்ஜ்
4. இலவச வாசிங் மெசின்
5. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச ஸ்கூட்டி
6. திருமணத்திற்கு 4 கிராம் முதல் 8 கிராம் வரை இலவச தங்கம்
இப்பவே கண்ணை கட்டுதா ? ஆனால், விரைவிலேயே இந்த அறிவிப்புகள் ஜெயலலிதாவிடமிருந்து வரக்கூடும்.