சனிக்கிழமை காலை 4 மணியளவில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமாரின் வாகனத்தை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றிய தகவல்களை தூத்துக்குடி தேர்தல் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதுகுறித்து, நியூஸ் மினிட் சார்பில் தேர்தல் அலுவலர்களிடம் விசாரித்த போது,” பறக்கும் படையினர், திருச்செந்தூர் அருகேயுள்ள நல்லூர் விளக்கில் வைத்து அவரது காரை கைப்பற்றினர். தற்போது கைப்பற்றப்பட்ட முழுமையும் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரை, திங்கட்கிழமை நீதிமன்றத்தின் முன்பு, இந்த பணத்தை ஒப்படைக்கப்படும் போது பதிவு செய்யப்படும்.” என கூறினர்.
பணம் கைப்பற்றப்பட்டது குறித்து சரத்குமாரிடம் கேட்ட போது, தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதாக கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார். பணம் பறிமுதல் செய்யப்பட்டபோது நடிகர் சரத்குமார் அந்த காரில் இருந்ததை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் உறுதி செய்துள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சரத்குமார், அதிமுக சார்பில் வேட்பாளராக களத்தில் நிற்கிறார்.
தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 4 முதல் அமல்படுத்தப்பட்ட பின், தேர்தல் ஆணையம் இதுவரை 80 கோடிக்கும் அதிகமாக கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.